சாலை ஓரத்து குப்பைத்தொட்டிக்குள்
துர் நாற்றம் வீசிக்கொண்டே இருந்தது.
போபவர்கள் வருபவர்கள் எல்லோரும்
மூக்கைப் பொத்திக் கொண்டும்…
எச்சிலைத் துப்பிக் கொண்டும்…
சுயநலமாக நகர்கிறார்கள்.
ஒருவரேனும் நின்று நிதானித்துப் போவதாய்
நான் அவதானிக்கவில்லை – நாற்றம் என்
மூக்கையும் தைத்தது. நாக்கையும் பிய்த்தது.
வாடிய வாழை இலையில் சுற்றப்பட்ட …
எலும்புகள் தெரியும் படியான…
போசாக்கு குறைந்து போனதான…
ஒருபிஞ்சு குழந்தையின்
நிர்வாணமான காய்ந்த சடலம்.
தொப்பிள் கொடியின் துவாரத்திலும்…
உதடுகளின் ஈரத்திலும்…
பால் உறுப்பிலும்… மல வாசலிலும்…
ஈக்கள் இரை திரட்டிக் கொண்டிருந்தன.
இரக்கமில்லாமல் ஏன் தானோ..?
குழந்தை குப்பைத்தொட்டிக்குள் வீசப்பட்டது.
வறுமையின் கொடுமையாலோ முறைதவறிப்பிறந்ததாலோ….
முடமாக பிறந்ததாலோ.. – அல்லது
பெண்ணாய் பிறந்ததாலோ..வீசப்பட்டிருக்கலாம்
கேள்விகள் மட்டுமே வரிசையாய் எழுந்தன.
பதில்களைத் தவிர…
சடலத்தை அடக்கம் செய்யயாவது.
யார்… தான்…முன்வருவார்களோ…?
இனி நாளை..காலை தானே வரும்.
“மாநகர சபைக் குப்பைலாறி“
கவிதை தொகுப்பு: நெடுந்தீவு – முகிலன்