கருங்கோழி அல்லது நாட்டுக்கருப்புக் கோழி, கடக்நாத் கோழி (Kadaknath) போன்ற பெயர்களால் அழைக்கப்படுவது இந்தியாவில் காணப்படும் கோழியாகும்.
கருங்கோழி என்பது உள்ளும் புறமும் எல்லா பாகங்களும் கருப்பாக இருக்கும் ஒரு கோழிவகை…இவை இந்திய மத்தியப் பிரதேச மாநிலக் காடுகளில் வளரும் நோய் எதிர்ப்பு சக்தி மிக்க, “கடக்நாத்’ என்றழைக்கப்படும் கோழியினமாகும். இக்கோழிகளின் இறைச்சி கருப்பாக இருப்பதால், இது பிளாக் மீட் சிக்கன், காலாமாசி என்றும் அழைக்கப்படுகிறது… தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் ஓமலூரிலும், வேலூரிலும் பண்ணை அமைத்து வளர்க்கப்படுகின்றன.
இக்கோழியின் இறைச்சி, ருசியாகவும், மணமாகவும் இருப்பதுடன், மருத்துவ குணமும் கொண்டது. இக்கோழி இறைச்சியை அதிக நாள்பட்ட நோய்களுக்கு மருந்தாகப் பயன் படுத்துகின்றனர்.
ஓமியோபதி மருத்துவத்தில், நரம்புத் தளர்ச்சி உள்ளவர்களுக்கு, கருங்கோழி இறைச்சியை சாப்பிட பரிந்துரைக்கின்றனர்.
இக்கோழி இறைச்சி, 25 சதவிதம் அளவுக்கு புரதச்சத்து கொண்டுள்ளது… கொலஸ்ட்ரால், 0.73 -1.05 சதவீதம் மட்டுமே உள்ளதால் இந்த இறைச்சியை இரத்த கொதிப்பு, இதய நோய் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பவர்கள் நன்றாகச் சாப்பிடலாம். இறைச்சியில் அதிகமான அமினோ அமிலங்களும், மனிதர்களுக்குத் தேவையான ஹார்மோன் சத்துக்களும் உள்ளன.
மத்தியப் பிரதேசம், மராட்டியம், தில்லி போன்ற வடமாநிலத்து மக்கள் இக்கோழிகளின் இறைச்சி, ஆண்களுக்கு ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதோடு, வயாக்ரா மாத்திரை போல் விந்தணுக்களின் வீரியத்தையும் அதிகரிக்கும் என நம்புகின்றனர்.
மைசூரில் செயல்படும் உணவு ஆராய்ச்சிக் கழகம், கருங்கோழி இறைச்சி இதய நோயாளிகளுக்கு மிகவும் நன்மை தரக் கூடியது என, சான்றளித்துள்ளது. சீன நாட்டின் மருத்துவத்திலும், உணவிலும்கூட இந்தக் கருங்கோழிகள் சிறப்பாகப் பயன்படுத்தப்படுகின்றன
சித்த மருத்துவத்தில் குட்டம், காணாக்கடி, சிரங்கு, விரணங்கள், வாதம் போன்ற நோய்கள் கருங்கோழிக் கறியால் குணமாகும் என்கிறது சித்த மருத்துவம். முற்காலத்தில் ஆண்களுக்கு வீரியத்தை அதிகரிக்க, சில மூலிகைகளுடன் சேர்த்துச் சமைத்த கருங்கோழிக் குழம்பு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பெருங்காயம், மிளகு, பிரப்பங் கிழங்கு எனப் பல மருத்துவ மூலிகைகளைச் சேர்த்துச் செய்யப்படும் கருங்கோழி சூரணத்தால் விக்கல், குட்ட நோய்கள், மூலம், வாயு நீங்கும் என்பதற்கான பாடல் குறிப்பு உண்டு